Showing posts with label சிலை. Show all posts
Showing posts with label சிலை. Show all posts

Thursday, March 10, 2011

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழியுறுத்தி அர்ச்சக மாணவர்கள்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முற்றுகைப் போராட்டம்


அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழியுறுத்தி அர்ச்சக மாணவர்கள்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முற்றுகைப் போராட்டம் .................................

       4.3.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் தமிழக அரசு வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்காமல் இருக்க வழியுறுத்திப் போராட்டம் நடத்துவதெனத் தீர்மானித்து 3.3.2011 நண்பகல் 12 மணிக்கு அர்ச்சக மாணவர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுர வீதியில் ஊர்வலமாகச் சென்று தெற்கு கோபுர வாயில் முன்பு முற்றுகையிற்றுப் போராட்டம் நடத்தினர்.மாணவர்களும்,மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் போராட்டம் நடத்த வருவதை அறிந்த மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன சிவச்சாரியார்களும் பட்டர்களும் கோயிலின் தெற்க்கு வாயிலை அடைத்து விட்டனர்.பட்டர்களுக்கு ஆதரவாக மதுரை மாநகர காவல்துறையினர் தெற்க்கு வாயிலை அடைத்து அணிவகுத்து நின்று கொண்டன்ர்.கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் போராட்டக்காரர்களின் செருப்பைக்கூட வாங்க மறுத்து விட்ட நிலையில் செருப்புகளை வீதியிலே விட்டெறிந்துவிட்டு கொளூத்தும் வெயிலில் வழக்கறிஞர்களூம் , அர்ச்சக மாணவர்களூம் அரைமணி நேரத்திற்க்கும் மேலாக விண்ணதிர முழக்கமிட்டு முற்றுகைபோராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    போராட்டத்தில் அனைத்து சாதி அர்ச்சக மாணவர்களை அர்ச்சகராக விடாமல் சூழ்ச்சி செய்து உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆதி சிவாச்சார்யார்களைக் கண்டித்தும்,உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து நடத்தாத தமிழக அரசைக் கண்டித்தும்,ஆலயத் தீண்டாமையை ஈராயிரம் ஆண்டுகளாக அமல்படுத்தி தகுதி வாய்ந்த பிற்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களை கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களிடம் தமிழர்கள் திருநீறு வாங்கக் கூடாதெனவும், பெரியாரின் வாரிசாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் கருணாநிதியின் கபட வேடத்தை அம்பலப்படுத்தியும் ,4.3.2011 அன்று வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி அர்ச்சக மாணவர்களுக்கு பணிநியமனம் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.இக்கோரிக்கைகளை வழியுறுத்தி 2000 துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

       முதலில் போராட்டம் நடத்தியவர்களிடம் போராட்டத்திற்க்கு அனுமதி பெறவில்லை முழக்கமிட்டுக் கலைந்து செல்லுங்கள் எனக் கோரிய போலீசிடம் முற்றுகைப் போராட்டத்திற்க்கு அனுமதி பெற முடியாது; கலைந்து செல்லவும் முடியாது என உறுதியாகச் சொல்லி போராட்டம் தொடர்ந்தது; போராட்டம் தொடர்ந்தால் கைது செய்வோம் எனப் போலீசு மிரட்ட கைதுக்குத்தான் போராட்டமே செய்கிறோம் உடனே கைது செய்யுங்கள் என மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டு போலீசு வேனில் ஏறினர் அர்ச்சக மாணவர்களும், வழக்கறிஞர்களும்.   
     போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த போதும் காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உறுதியாகப் போராடிய விதம் மக்களைக் கவர்ந்தது.

தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில்  வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் அர்ச்சக மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் மாணவர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சங்கமாகத் திரட்டி. உச்ச நீதிமன்ற வழக்கிலும் இணைந்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் மாணவர்களுக்கு சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை
பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்என்றும் வலியுறுத்தியது. இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.
ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் இந்து மத உரிமைஎன்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள்  இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற நல்லொழுக்க சீலர்களும்“  அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.
  மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் சிவாச்சார்யார்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.ஆனால் தமிழக அரசு இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.ஆனால் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரான  நாங்கள் இப் பிரச்சினையை விடப் போவதில்லை.


பார்ப்பனீய சாதி ஆதிக்கத்திற்க்கு எதிராக உறுதியாக நின்ற ஒரு குமூடிமலை ஆறுமுகசாமியைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம்,திருவாசகத்தை அரங்கேற்றி, கோயிலையே அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து  அடுத்ததாக அர்ச்சக மாணவர் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம். மாணவர்களை சங்கமாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் இணைந்தது என்று சட்ட ரீதியிலும் , மாணவர்களை அணிதிரட்டி வீதியிலும் என்ற வகையில் இப்போராட்டம் தொடர்ந்து வருகிறோம். மனித உரிமைகளுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக எதிரி என்ற வகையில் பார்ப்பனீய  சாதி ஆதிக்கத்தை  வேரறுப்பது வரை எங்கள் மனித உரிமைப் போர் தொடரும்.....................



      ARCHAGAR TRAINED STUDENTS SOCIETY-TAMILNADU
REGD. No. 189/09
128, Gokulam Illam, Arasamara street
Tiruvannamalai.
cell: 9047400485
http://appsa-tn.blogspot.com

Sunday, December 12, 2010

பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!

இந்து முண்ணனி குண்டர்களால் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன்

இந்து முண்ணனி ரவுடிகள் தாக்கப்பட்ட வ.அரங்கநாதன், மருத்துவமனையில்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விடுவோம் என கருணாநிதியால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்வேறு சாதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகம விதிகள், பூஜைகள் போன்ற கோயில் விதிகளில் பயிற்சியளிக்க 2006ஆம் ஆண்டில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.

அப்போதே மதுரையைச் சேர்ந்த சில பார்ப்பன அர்ச்சகர்களும், பட்டர்களும் உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பார்ப்பன சாதியில் பிறந்த தம்மைத் தவிர வேறு யாரும் சிலைகளைத் தொட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்ய தகுதி இல்லையென்றும், அப்படிச் செய்வதால் சிலை தீட்டுப் பட்டுப்போகும் என்றும் மீறி அப்படிச் செய்வதால் சிலையை விட்டும் கோயிலை விட்டும் சாமி வெளியேறி விடுவார் என்றும், என்னதான் மந்திரங்களையும், ஆகம விதிகளையும் படித்து இருந்தாலும் கருவறைக்குள் நின்று சிலையைத் தொடும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்றும் சொல்லி ஒரு தடையாணையைப் பெற்றனர்.

சமூகநீதியின் ஒரே அத்தாரிட்டி தாம் தான் என்று வெளியே சூரத்தனம் காட்டும் கருணாநிதி அரசு, பார்ப்பன அர்ச்சகர்களை வழக்குமன்றத்தில் முறியடிக்கும் உத்வேகம் இல்லாமல் வெறும் ஒப்புக்குச்சப்பாணி போல எதிர்வழக்காடி வருவகிறது.

மட்டுமல்லாமல், மேற்கண்ட பயிற்சிக் கல்லூரிகளில் படித்துத் தேறிய மாணவர்களுக்கு இன்று வரையில் பணிநியமன ஆணையை வழங்காமல் உள்ளது. கல்லூரியில் படித்துத் தேறிய மாணவர்களுக்கான சான்றிதழையும் ம.உ.பா மையம்(HRPC) தலையிட்டு மாணவர்களை சங்கமாகத் திரட்டிப் போராடிய பின் தான் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி உச்சிக்குடுமிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததை சாக்காக வைத்துக் கொண்டு தி.மு.க அரசு எல்லா பயிற்சி பாடசாலைகளையும் மூடிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழக அரசு சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் பராசரன்தான் இப்போது தமிழக அரசை எதிர்த்து மதுரை பார்ப்பன பட்டர்களுக்காக வழக்காடுகிறார்.

இது வெறுமனே வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லையென்பதாலும், பார்ப்பனத் திமிர் உறைந்து கெட்டிப்பட்டுக் கிடக்கும் கருவறையை கழுவிச் சுத்தப்படுத்த சூத்திரர்களுக்குக் கிடத்துள்ள பொன்னான ஒரு வாய்ப்பு என்பதை அறிந்திருந்ததாலும், மாணவர்கள் சங்கம் சார்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு தரப்பினராகச் சேர்ந்து வழக்கை நடத்தி வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இவ்வழக்கின் தன்மை என்பது வெறும் சட்டவாத சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் உள்ள வளைவு சுழிவுகளால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒன்றல்ல. கொலைகார காஞ்சி ஜெயேந்திரனும், காமவெறிபிடித்த பார்ப்பன அர்ச்சகனான தேவநாதன் போன்றவர்களுக்கும் சிலைகளைத் தொட்டு பூஜைகள் செய்ய தடையேதும் இல்லாத போது, மந்திரங்களையும் பூஜாவிதிகளையும் முறையாகப் படித்தாலும் பிறப்பைக் கொண்டு இம்மாணவர்களை ஒதுக்குவதானது கருவறைத் தீண்டாமையாகும்.

இது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெரியாரின் பிறந்த நாள் அன்று அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை ரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் ம.உ.பா மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும், பகுதி பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் வ.அரங்கநாதன்

இது பற்றிய செய்தி முதலில் வினவிலும் பின்னர் விகடனிலும் விரிவாக வெளியானது. முக்கியமாக தந்தை பெரியார் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களது கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியார் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்பதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை. அனைத்து சாதியனரும் அர்ச்சகராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்து அதை நிறைவேறப் போராடியவர் பெரியார். அவர் நாத்திகரே ஆனாலும் சூத்திர ஆத்திகர்கள் மீதுள்ள தீண்டாமையை ஒழிக்க போராடினார். அதனால் அவருக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை சூட்டியது நிச்சயமாக பொருத்தமானதுதான். இதுதான் இந்து முன்னணிக்கு பிடிக்கவில்லை.

இப்படி இந்து பார்ப்பன தீண்டாமை வெறியாட்டம் பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்து முண்ணனியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அன்று இரவே அர்ச்சகர் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதனையும் ம.உ.ப மையத் தோழர்களையும் மறித்து ‘ஏன் இவ்வாறு போராடுகிறீர்கள்?’ என்று கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு, ‘இப்பவே கூட்டிப் போய் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை வாங்கித் தந்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்கள் தோழர்கள். அதில் மூக்குடைபட்டுப்போன அவர், ‘அண்ணாமலையார் கோயிலிலெல்லாம் முடியாது. வேணும்னா ஏதாவது ரோட்டோர கோயில்ல பூசாரி வேலை வாங்கித் தருவோம்’ என்று திமிர்த்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

‘எல்லாரும் இந்துக்கள் தான்’ என்று ஊர் ஊருக்கு சொல்லிக் கொண்டு அலையும் இராம கோபாலன் பிராண்டு சமத்துவத்தின் யோக்கியதை இதுதான். பார்ப்பனர்களுக்கு உசந்த சாமி; கீழ் சாதிக்காரர்களுக்கு ரோட்டோர சாமியாம். பார்ப்பனர்களுக்கு நன்றாக கலெக்ஷன் கட்டும் மதுரை மீனாட்சி – சூத்திரனுக்கு ரோட்டோரத்தில் அம்போவெனக்கிடக்கும் பட்டத்தரசி. இந்து முண்ணனி, ஆர்.எஸ்.எஸ் போன்ற பார்ப்பன தீவிரவாத இயக்கங்களைப் பொருத்தளவில் சாமியோ ஆசாமியோ எல்லாவற்றிலும் மேன்மையானவைகளை மட்டும் குடுமிக்குள் முடிந்து வைத்துக் கொள்வார்கள்.

ஊடகங்களில் விவகாரம் நாறத் துவங்கியதும் இந்து முண்ணனியின் மாவட்டச் செயலாளர் ரங்கநாதனின் வீட்டுக்குச் சென்று விசாரிப்பது, அக்கம் பக்கத்தில் விசாரிப்பது என்று ரங்கநாதனின் உறுதியைக் குலைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட முயல்கிறார். இது போன்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்வதை அடுத்து, அக்டோபர் 15ம் தேதி ரங்கநாதனும் ம.உ.பா மையத் தோழர்களும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியைச் சந்தித்து ரங்கநாதனின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி மனு கொடுக்கிறார்கள்.

அவர் அந்த மனுவை டி.எஸ்.பியை விட்டு விசாரிக்கச் சொல்வதாகவும் அன்று மாலை அவரைச் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார். அன்று மாலையே டி.எஸ்.பி அலுவலகத்திற்கு ரங்கநாதன் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடிகள், அவரை பலமாகத் தாக்குகிறார்கள். சுதாரித்துக் கொண்ட ரங்கநாதன் தன்னைத் தாக்கியவர்களை செல்போன் கேமராவில் படம் பிடித்து விடுகிறார். போட்டோ ஆதாரத்துடன் காவல் துறையில் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தற்போது விசாரித்து வருகிறார்கள்.

முதலில் மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களின் சங்கத்தைப் பிளந்து வழக்கை நீர்த்துப் போய்விடச் செய்து விடலாம் என்று பார்ப்பனர்கள் தரப்பில் முயன்றுள்ளனர். அந்தத் திட்டங்கள் மண்ணைக் கவ்வியதால், அடுத்து சங்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் ‘உனக்கு என்ன வேண்டும், ஏதாவது சின்னக் கோயிலைத் உன் பொறுப்பில் தருகிறோமே. இல்லை நீ ஏதாவது கம்ப்யூடர் படி -நாங்கள் செலவைப் பார்த்துக் கொள்கிறோம்’ என்றெல்லாம் பலவாறு ஆசை காட்டி அவர்கள் வழக்கை திரும்பப் பெற வைக்க முயன்றனர். அதுவும் மண்ணைக் கவ்வியது.

இப்போது பார்ப்பனர்களின் வழக்கமான உத்தியான ‘ஆனமட்டும் காலைப் பிடி ஆனபின்பு கழுத்தைப் பிடி’ என்கிற கதையாக தமிழகத்தில் பார்ப்பனர்களின் உருட்டுக் கட்டையாக விளங்கும் இந்து முண்ணனியைச் சேர்ந்த ரவுடிகளை ஏவி விட்டுள்ளனர்.

ஆனால், எத்தனை முறை எப்படியெல்லாம் ஆசை காட்டினாலும் சரி – மிரட்டினாலும் சரி – ஏன் உயிரே போவதானாலும் சரி; பார்ப்பனர்களிடம் சரணடைவதில்லை என்பதில் ரங்கநாதன் மிகத் தெளிவாய் இருக்கிறார். தொட்டால் தீட்டு என்று தெருவில் சொன்னால் அது குற்றம் என்பதற்கு சட்டம் இருக்கிறது – அதையே கருவறைக்குள் நின்று சொன்னால் சட்டம் செருப்பை வாசலிலேயே கழட்டி விட்டுவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு பவ்வியமாய் நிற்கிறது. இதை எதிர்த்து தீண்டாமையின் கோட்டையாக விளங்கும் கருவறையிலேயே அதற்கு சமாதி கட்டும் தோழர்களின் போராட்ட உறுதியின் முன் பார்ப்பன இந்துமதவெறியர்களின் சதிகள் நிச்சயமாய் தோற்றுப் போகும்.


(Source: http://www.vinavu.com/2010/10/25/ranganathan-attacked/)