Thursday, May 2, 2013

கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் சாமியைத் தொட்டால் தீட்டாம். ஏனென்றால் அவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை.


னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்!
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சார்யர்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நேரம் : 22-04-2013 திங்கட்கிழமை காலை 10.30 மணி
இடம் : மாவட்ட நீதிமன்றம் முன்பு, மதுரை
தலைமை : திரு ரங்கநாதன் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு
கண்டன உரை:
வழக்கறிஞர் A K ராமசாமி அவர்கள், செயலாளர், வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை
தோழர் கதிரவன், மக்கள் கலை இலக்கிய கழகம், மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் ந. குருசாமி செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை
வழக்கறிஞர் சே வாஞ்சிநாதன் துணைச் செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
வழக்கறிஞர் மு திருநாவுக்கரசு, தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மதுரை
திரு ம லயனல் அந்தோணிராஜ் செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
மற்றும் அர்ச்சகர் மாணவர்கள், கிராமப் பூசாரிகள்
நன்றியுரை : வழக்கறிஞர் பா. நடராஜன் துணைத்தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
கோயில்னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2007ம் ஆண்டில் தமிழகத்தின் ஆறு முக்கியமான கோவில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு துவங்கியது. 2007-08 கல்வி ஆண்டில் ஒரு வருட அர்ச்சகர் கல்விப் பயிற்சியும், இருமாத புத்தாக்கப் பயிற்சியினையும் 206 பேர் முடித்தனர். 2006ம் ஆண்டில் தமிழக அரசின் அவசர சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க அன்றைய தி.மு.க. அரசாங்கம் மறுத்து விட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், “அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினை” உருவாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாகிப் போராடி வருகின்றனர். இடைக்காலத் தடையினை விலக்கவோ, வழக்கினை விரைவுபடுத்துவோ முயற்சிக்காத தி.மு.க. அரசாங்கம், அவரச சட்டத்திற்குப் பதிலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்திலோ அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான முக்கியமான பிரிவையே நீக்கி விட்டது. உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி நிலையினை எட்டி 23.04.2013 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜெயலலிதா அரசாங்கமோ சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாக கழுத்தறுப்பு வேலையினை செய்யத் துவங்கியுள்ளது.
கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யும் தகுதி பார்ப்பன சாதியினருக்குத் தவிர மற்றவருக்குக் கிடையாது என்பது பார்ப்பன வர்ணாஸ்சிரமம் உருவாக்கிய அநீதி. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக் குழு, 2008ல் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழகத்தில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்களில் 80 சதவீதம் பேர் முறையான பயிற்சியில்லாமலும், வாரிசுதாரர் உரிமையிலும்தான் பூசை செய்து வருகின்றனர். கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் பூசை செய்யக் கூடாதாம். ஏனெனில் இம்மாணவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை. எனவே சாமியைத் தொட்டால் தீட்டாம்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை அல்ல இது. கருவறைக்குள் நிலவும் சாதித் தீண்டாமையை ஒழிக்க வேண்டிய பிரச்சனை, குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, 976ம் ஆண்டு சேஷம்மாள் வழக்கிற்குப் பின்பாக, அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நடவடிக்கை, அது எவ்வகையிலும் மத சுதந்திரத்திலை தலையிடுவதாகக் கருத முடியாது என பல வழக்குகளின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிறப்பால் இழிவானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர், இவர்கள் பூசை செய்தால் புனிதம் கெட்டு, சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனரல்லாதோர் மேல் சுமத்தப்படும் இழிவினை இன்னமும் ஏற்கத்தான் வேண்டுமா என தமிழகம் கிளர்ந்தெழவில்லை. கருவறைக்குள் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தினை எதிர்க்க வேண்டிய நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதியினர் திரட்டப்படுகின்றனர். அதனால் தான், தமிழக அரசால் இவ்வழக்கினை நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் மிகத் துணிச்சலாகக் கூற முடிகின்றது.
பெரியார்பெரியார் பிறந்த மண் என்ற மூச்சுக்க்கு முன்னூறு தடவை பேசுவதால் பயனில்லை. மாறாக ஜெயலலிதா அரசாங்கத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை நாட்டல் நடவடிக்கைக்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்து “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என முழங்க வேண்டிய தருணமிது. “கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இந்த அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட்சியைத் தவிக்க விட்டு பூசை செய்யாமல் ஓடிப் போனவர்கள்தான் இந்த ஆதி சிவாச்சாரியர்கள். பிரிட்டிஷ் ஆட்சி போடவுடன் எங்கள் அதிகாரமும் போய் விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய “தேசபக்தர்கள்”தான் இவர்கள். இன்றைக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் போராடுகிறவர்களும் இவர்கள்தான். இவர்களிடம் கடவுள் பக்தி மட்டும் அல்ல. கடவுள் மீது மரியாதை கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால் மீனாட்சியைப் புறக்கணித்து பூசை செய்யாமல் ஓடிப் போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளை பறிபோய் விடக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம். அதனால்தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து வருகின்றனர். அப்படியானால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்துக்கள் இல்லையா?
தமிழக அரசே!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை இழுத்தடிக்காமல் விரைவுபடுத்து!
மீனாட்சி கோவில் பட்டர்களுக்கு ஆதரவாக பார்ப்பன ஆதிக்கத்தினை கருவறைக்குள் நிலைநாட்ட முயற்சிக்காதே!
பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்களுக்கு பாரபட்சமின்றி உடனே வேலை கொடு!
தமிழக மக்களே!
கருவறைக்குள் நிலவும் சாதி தீண்டாமைக்கு எதிராகப் போராடுவோம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்கப்பட கிளர்ந்தெழுவோம்!
தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
தொடர்புக்கு : 9443471003

No comments:

Post a Comment