Wednesday, December 15, 2010

தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!

பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை
உச்சநீதிமன்றம் இன்னும் மேல் சாதியினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது  மீண்டும் நிருபனமாகியுள்ளது. இப்படி சொல்ல காரணம் கடந்த 3ஆண்டுகளாக ஒரு வழக்கு விசாரணைக்கு வராமல் இன்று போய் நாளை வா என்ற கதையாகவே உள்ளது. அந்த வழக்கு, தமிழகத்தில் இயற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்க்கு எதிரான வழக்கு.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக சட்ட பேரவையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர், தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகாரகவேண்டும் என்பது பெரியார் கண்ட கனவு. ஆனால் அந்த கனவு அவர் மறையும் வரை நிறைவேறவில்லை. அதுபற்றி அவர் மனம் வெதும்பி நிறைவேறாத ஆசையை என் நெஞ்சில் முள்ளொன்னு குத்தியுள்ளது என வெளிப்படுத்தினார்.
தந்தை பெரியாரின் இதயத்தில் குத்தப்பட்டிருந்த அந்த முள்ளை இன்று தான் நம்மால் எடுக்க முடிந்தது எனச்சொல்லி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய வேகத்தோடு பார்ப்பனர் அல்லாத பிற சாதியினர் சாஸ்திரங்களை கற்றுக்கொள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியை திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, சென்னை, திருச்சி, திருச்செந்தூர் ஆகிய ஆறு ஊர்களில் அமைத்தார். அங்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட கருவறைக்குள் செல்ல மறுக்கப்பட்ட எல்லா சாதியை சேர்ந்த இளைஞர்களும் சேர்ந்தனர். அவர்களுக்கான தங்கும் இடம், உணவு போன்றவற்றை இலவசமாகவே வழங்கியது அரசு.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பன சக்திகள் மாணவர்களுக்கு, பயிற்சி ஆசிரியர்களுக்கு தொந்தரவு, மிரட்டல்களை தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு விட்டு ஓடிப்போயினர். திருவண்ணாமலையில் பயிற்சி ஆசிரியராகயிருந்த ராமகிருஷ்ணஜீவா என்கிற பிராமணரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதோடு மறைந்திருந்து தாக்கவும் செய்தனர்.
இதற்கெல்லாம் அசராத அவர் சாஸ்திரங்கள் இந்து சமுகத்தில் உள்ள எல்லா சாதியினம் கற்கும் உரிமை உடையது. பிராமணர்களுக்கு மட்டும் சாஸ்திரங்கள் உரியதல்ல. நான் மற்ற சாதியினருக்கும் கற்று தருவேன் என உறுதியுடன் கற்று தரும் பணியில் இருந்தார். தடைகளை தாண்டி இறுதியில் தமிழகத்தில் 206 மாணவர்கள் பல கட்ட தேர்வுகளை எழுதி அர்ச்சகர் பயிற்சியை முடித்தனர்.
இதை கண்டு வயிறு எரிந்த பிராமண சக்திகள் தங்கள் தொழில் பறிபோகிறதே என மதுரையை சேர்ந்த பட்டர்கள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள், சிவாச்சாரியார்கள் தவிர வேறு யாரும் சாமி சிலையை தொட்டு பூசை செய்ய அறுகதையற்றவர்கள். மற்ற சாதியினர் தொட்டால் கடவுள் கோவித்துக்கொள்வார். ஆகமவிதிப்படி கீழ்சாதியினர் கர்ப்ப கிரகத்தில் நுழைந்தால் கடவுள் கோவிலை விட்டு ஓடிப்போய்விடுவார் எனச்சொல்லி தடை கேட்டார்கள். தமிழக உயர்நீதிமன்றம் தடை தர மறுத்தது.
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தை நோக்கி ஓடினார்கள் கேட்டதும் இடைக்கால தடை தந்தது. இந்த தடையை காரணம் காட்டி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது அரசு. தடையை உடைக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் மனு செய்தது. இந்த வழக்கில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பிரபல பார்ப்பன வழக்கறிஞர் பராசரன் வாதாடபோகிறார். தமிழக அரசின் சார்பில் எம்.என்.ராவ், மரியஅர்ப்புதம், நெடுமாறன் என 3 பேரை நியமித்துள்ளது. எல்லாம் தயார்; விசாரிக்க வேண்டியது தான் பாக்கி.
ஆனால் வழக்கு தான் விசாரணைக்கு வரவிடமாட்டோம் என தடுக்கிறது சில பூணுல் சக்திகள். பொறுத்தது போதுமென கொதித்தெழுந்த அர்ச்சகர்க்கு படித்த மாணவர்கள் வேலை கிடைக்குமென்று சொன்னதை நம்பி படிச்சி தேர்வெழுதி வெற்றி பெற்றும் சான்றிதழ் தரமறுக்கிறார்களே என நியாயம் கேட்டு போராட்டங்கள் செய்தனர். தங்களது கோரிக்கைகள் வலுவாக வைக்க பயிற்சி முடித்த 206 மாணவர்கள் ஒன்றிணைந்து அர்ச்சக பயிற்சி மாணவர்கள் சங்கம் அமைத்தனர்.
அரசாங்க அதிகாரிகள் உச்சநீதிமன்ற வழக்கை சுட்டி காட்டினர். பாதிக்கப்படுவது நாங்களும் தான் என உச்சநீதிமன்றத்தின் கதவை தட்ட தயாராயினர். மாணவர்களுக்கு உதவ மனித உரிமை பாதுகாப்பு மையம் வந்தது.  உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனித உரிமை போராளிகளான வழக்கறிஞர்கள் காளின், காந்தர்ன் வாதாட மனு செய்தனர். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தற்போது வழக்கில் வாதாட அரசு தரப்பும் தயார், மாணவர்கள் தரப்பும் தயார். விசாரிக்க நீதிபதிகளோ, வழக்கை தொடுத்த பிராமணர்களோ தயாரில்லை. அதனால் தான் 3 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு இன்றும் பரிதாபமாக உச்சநீதிமன்ற குப்பை கூடைக்கு அருகில் கிடக்கிறது.
அந்த காகிதம் நீதிபதி முன் வரும் முன்பே அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, பாட்டி செத்து போய்ட்டாங்க, தாத்தா வழுக்கி விழுந்துட்டாரு என பள்ளி பிள்ளைகள் சொல்வதை போல காரணங்கள் சொல்லி வழக்கை தள்ளி வைத்துக்கொண்டே போகிறார்கள். கடைசியாக கடந்த ஏப்ரல் 15 தேதி விசாரணைக்கு வர வேண்டிய வழக்கை தலைமை நீதிபதி விடுமுறை என மே 6 ந்தேதிக்கு மாற்றிவிட்டார்கள்.

வரும் 6ந்தேதியும் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிபோகும் நிலைதான். காரணம் மே 11ந்தேதி தலைமை நீதிபதி ஒய்வு பெறுகிறார். அதனால் வழக்கு எடுக்க மாட்டார். அடுத்து வரும் தலைமை நீதிபதி எப்போது இந்த வழக்கில் கவனம் செலுத்துவார் என்பது தெரியாத நிலை தான்.
சங்கராச்சாரியார் வழக்கும் என்றதும் இரவிலும், விடுமுறை நாளிலும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் திறந்தது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு கல்விச்சாலையில் இட ஓதுக்கீடு தந்தபோது மேல் சாதியினர் எதிர்த்து வழக்கு தொடுக்க கால நேரம் பார்க்காமல் உச்சநீதி மன்ற கதவுகள் திறந்தன. இப்படி பல நேரங்களில் உயர் சாதியினருக்காக நடு இரவில் கூட மனுவை விசாரித்தது.
பிராமணர்களை போல பிற சாதியினர் கருவரைக்குள் நுழைந்து கடவுளை தொடலாம், பூசைகள் செய்யலாம் என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை பூணுல் சக்திகள் பொறுக்க முடியாமல் பிராமணர்களை தவிர வேறு சாதியினர் கடவுளை தொட அறுகதையற்றவர்கள் எனச்சொல்லி தடை கேட்டார்கள். கடவுள் சாதி பார்ப்பதில்லை, மேல்சாதி, கீழ்சாதி எனச்சொல்லி தீண்ட தகாதவர்கள் என சொன்ன பூணுல் சக்திகளை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கலாம் அல்லது வழக்கு பதிவு செய்திருக்காலம்.   ஆனால் அப்படி எதையும் செய்யாமல் கேட்டதும் இடைக்கால தடை தருகிறது.
இந்த இடைகாலதடை உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவும், விசாரணைக்கு வராமல் இருப்பதற்கும் பிராமணர்கள் மட்டுமல்ல தமிழக அரசும் ஒரு காரணம்.

1970ல் தந்தை பெரியார் தமிழகத்தில் கோயில்களில் நடக்கும் சாதி ரீதியான கொடுமைகளை கண்டித்து கருவரை நுழைவு கிளர்ச்சி போராட்டம் தமிழகம் முழுக்க நடைபெறும் என அறிவித்தார். அப்போது முதல்வராகயிருந்த மு.கருணாநிதி, அய்யாவை எங்களது அரசு கைது செய்ய முடியாது. அதனால் அவரின் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றார்.
1972ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வாரிசுரிமை அர்ச்சகர் முறையை ஒழித்தார். இந்து சமயத்தில் சாஸ்திரம் தெரிந்தவர்கள் கடவுளுக்கு பூசை செய்யலாம் என்றது அப்போதைய சட்டம். மறைமுகமாக எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றது. இதை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 12 பார்ப்பனர்கள் உச்சநீதி மன்றத்திற்க்கு போயினர். அங்கு தமிழக அரசு போட்ட சட்டம் செல்லும் என்றது 5 பேர் கொண்ட நீதிமன்ற பெஞ்ச்.
உச்சநீதிமன்ற வழக்கின் விவாதத்தில், சாஸ்திரங்கள் தெரிந்தவர்களையே கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிப்போம் என்றார் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கோவிந்தசாமி. உடனே பிராமணர்கள் சார்பிலான வழக்கறிஞர் சாஸ்திரம் தெரிந்தவர்ளையே நியமிப்போம் என்கிறார்கள். வைணவ கோயில்களில் சைவத்தை சேர்ந்தவர்களையும், சைவ கோயில்களில் வைணவத்தை சேர்ந்தவர்களை  அர்ச்சகர்களாக நியமித்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்கள். உடனே அரசு வழக்கறிஞர் நாங்கள் ஆகமவிதிப்படி நடப்போம் என முரண்பாடான உறுதிமொழியை தந்தார். உச்சநீதிமன்றம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு அர்ச்சகர்களின் வாரிசுரிமை முறைக்கு தடை விதித்து அரசின் சட்டத்திற்கு அங்கீகாரம் தந்தது.
38 ஆண்டுக்கு பின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றியபோது, ஆகம விதியை மீற மாட்டோம் என 1972ல் உத்தரவாதம் தந்த தமிழக அரசு இப்போது அதை மீறுகிறது எனச்சொல்லி இடைக்கால தடை வாங்கினார்கள்.
தடை வாங்கிய பின் பிராமண சக்திகள் இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் தடுத்துக்கொண்டுயிருப்பதை தமிழக அரசு நினைத்திருந்தால் ஸ்பெஷல் பெட்டிஷன் தாக்கல் செய்து வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்திருக்கலாம் ஆனால் அரசு கடந்த 3 ஆண்டுகளாக மவுனமாகயிருக்கிறது. இதனால் 206 மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை கேள்வி குறியோடு எதிர்நோக்குகிறார்கள்.
இது போன்ற தவறுகள் வாதத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் நல்லது. ஆதில் மாறி வேறு ஏதாவது உறுதிமொழி தந்தால் 100 ஆண்டுகளுக்கு பின்னும் பூணுல் சக்திகள் பிரச்சனை செய்யும்.
தந்தை பெரியாரின் இதயத்தில் குத்திய முள்ளை எடுத்ததாக பெருமை படுத்திக்கொண்ட கலைஞர்,  அந்த இதயத்தில் வழியும் ரத்தத்தை கவனிப்பாரா?

No comments:

Post a Comment